Thursday, June 28, 2012

வசந்த வாசல்!


எல்லாம் விதி
என்று பழகிப்போன
என் வாழ்க்கை
ஏமாற்றங்களால்
நிறைந்திருந்தது!

துன்பங்களின் இறுதி அத்தியாயம்
முடியும் வரை காத்திருக்கிறேன்..
இனி மகிழ்ச்சி தொடங்கும்
என்ற நம்பிக்கையில்!

துயரங்களால்
துரத்தப்பட்ட என் வாழ்வு
இனி பூக்களால்
அலங்கரிக்கப்படும்!

எல்லோரும்
இராமர்கள்தானே..
தத்தமது இராவணக் குணங்கள்
அம்பலமாகும் வரை

ஆதலால்

குற்றம் சொல்லியே
பழகிப்போன
சுற்றத்தாரும் இனிமேல்
என்னைத் தேடி வருவார்கள்!

என்
கண்ணீரைத் துடைத்தெறிந்து
பன்னீரை ஏந்தியிருக்கிறேன்..

வசந்த வாசலில்
எனக்கான தென்றல்
வீசிக்கொண்டிருக்கிறது!!!

பொய்மை!


என் ஏணியாக நீயும்
உன் ஏணியாக நானும்
பொறாமையின்றி வாழ்ந்த
காலங்கள்
கனவு போல இருக்கிறது!

உன் ஞாபகங்கள்
என்னை
ஆட்டங் காணச் செய்கிறது..
உன் பிரிவு
என்னை தடுமாற வைக்கிறது!

கூட்டத்திலும் தனிமையிலும்
உன் முகம் தெரிகிறது..
பகிர்ந்து கொள்ளவியலா
சோகங்களால்
உடலும் மனதும் எரிகிறது!

புன் சிரிப்பு தொலைந்து
அகம் முழுதும்
புண்களாக வலிக்கிறது..

பிறரின் சிரிப்புக்கு
என் உதடுகள்
போலியாக சிரிக்கிறது!

உதிரும் இலைகளாகவும்
துளிர்க்கும் இலைகளாகவும்
மாறி மாறி - உன்
நினைவுகள் நெருடுகின்றன!

ஒவ்வொரு நாளும்
எதிர்பார்க்கிறேன்
உன் வருகையை.. ஆனால்
அவை தருகின்றன
சதாவும் பொய்மையை!!!

எரிந்த சிறகுகள்!


என் இதயம்
வடிக்கும் கண்ணீரை
உன்னால்
பார்க்க முடியுமா?

தளுதளுக்கும்
என் குரலை
உன்னால்
கேட்க முடியுமா?

நீ அருகேயிருந்தால்
துன்பங்கள் கிட்டவர
அச்சம் கொள்ளும்..

நீ தூரப்போனால்
அவை என்னை
ஆக்கிரமித்துக் கொல்லும்!

என்னைக் குருவி குருவி என்று
கூப்பிடுவாயே..
இப்போது இந்தக் குருவியின்
சிறகுகள் எரிந்து
பொசுங்கிவிட்டன!

உன்னுடன் என்னால்
உயரப் பறக்க முடியவில்லை..
உனை மறந்து
தனியாய் பறக்கவும் இயலவில்லை!

பழி சொல்லும் இந்த உலகில்
வாழவே அச்சப்படுகிறேன்..
எனக்கொரு
வழி சொல்லிவிடு!
வதைத்தது போதும்
வந்தென்னை
வாழ வைத்துவிடு!!!

தோல்வி!


மனிதனைப்
புடம்போட்டு
புதிதாக
பிறக்க வைக்கிறாய்!

நீதான் எம் ஆசிரியன்..
வாழ்க்கைப் பாடங்களை
கற்றுத் தருகிறாய்!

நீ முதலில் தருவது
கவலைகளையல்ல
சந்தோஷத்தின்
படிக்கற்களை!

விழுந்து எழுந்தால்தானே
வெற்றி கிடைக்கும்?
தானாய் வந்தால் அது
மதிப்பை இழக்கும்!

கண்ணீரில் மூழ்கியவன்தான்
சிரிப்பின் தாற்பரியத்தை
அறிந்தவன்!

போராட்டம்தான்
இன்ப நீரூற்றின்
அத்திவாரம்!!!

தொடரும் தொல்லைகள்!


வலை வீசி கஷ்டப்பட்டும்
வருமானத்தைக் காணோம்...
விலைவாசி ஏற்றத்தால் நாம்
வழியிழந்து போனோம்!

எங்கள் அடுப்புக்கள்தான்
எரியவில்லை - ஆனால்
வயிறெரிகிறது
பசியாலும், ஆத்திரத்தாலும்!

கவலைப் படாதீர்கள்
என்று சொல்ல பலருண்டு - எனினும்
வழிவகையைக்
காட்டித் தருவோர் எவருண்டு?

இருட்டில் நிகழும் திருட்டுக்கள்
ஒழிக்கப்படுகின்றன..
பகலில் நிகழும் திருட்டுக்கள்
அழிக்கப்படுகின்றன!

இரத்தத்தை உறிஞ்சுவது
அட்டைகள் மாத்திரமல்ல
அட்டையர்களாய்
பலரிருக்கின்றனர்!

நாங்கள் மனிதர்கள்
தோளேறி சவாரி செய்ய
கழுதைகளல்லர்!

சுனாமி
கிறீஸ் மனிதன்
எதுவும் தேவையில்லை..
எமை வீழ்த்த இந்த
விலைவாசி போதும்!!!

இரு பக்கம்! அல்லது முரண்!


வேதனையின் வலியால்
துடிக்கிறாயா?
கலங்காதே.. நிச்சயமாய்
உனக்கொரு வழி பிறக்கும்!

கவலைகளை உன்னுடன்
காவிச் செல்லாதே..
அவை உன்
செல்போன் அல்லவே?

சிகரம் தொட நினைக்கும் நீ
சின்ன குறைகளுக்கும்
மனம் தளரலாமா?

பகலும் இரவும்
இல்லையெனில்
நாட்கள் எப்படி நகரும்?

இன்பமும் துன்பமும்
இணைந்ததே மனித வாழ்க்கை..
இது இயற்கையின் நியதி!

ஒளிக்குப் பெறுமதி
இருப்பது போலவே
இருளுக்கும் பெறுமதியுண்டு!

இனிப்பை மாத்திரம்
நீ விரும்பினால்
மாத்திரைகளால்
உன் நோய் சுகமாவதெப்படி?

அஸ்தமனத்துக்குப்
பிறகுதான்
உதயம் என்பதை
மறக்கலாமா?

விதைகளை நட்டால்தானே
விருட்சங்களை
எதிர்பார்க்க முடியும்?

துன்பங்களில் நீ
சிக்கியிருப்பதாய் துவண்டுவிடாதே..
உனக்காக சிம்மாசனம்
காத்திருக்கிறது வெற்றியோடு!

இயற்கையில் இல்லை பிளவு..
இரண்டும் இணைந்ததே வாழ்வு!!!

கவிதைகளோடு மாத்திரம்!


கடல் தாண்டிச் சென்ற
உன் பிரிவு தாளாமல்
நான் சந்தோஷமின்றியிருக்கிறேன்..

உன் அருகில் இருந்தபோது
நிகழ்காலத்தின் நிம்மதி
உணர்ந்திருக்கிறேன்..

உனதான
அன்புப் பறிமாற்றங்களால்
எத்தனை முறை
மகிழ்ச்சியிலாழ்த்தியிருக்கிறாய்!

எனைப் பிரிந்த உன் வாழ்வு
எப்படிக் கழிகிறதோ..
கழிவிரக்கம் இல்லாமல்
காலம்தான் கழிகிறதோ?

கனவோடும் கற்பனையோடும்
காத்திருக்கும் - என்
காலம் பற்றி உன்னிடம்
காற்று சொல்லவில்லையா?

உன் கை கோர்த்து
நான் நடந்த கடற்கரையும்
நான் தனியாயழுவதைக்கண்டு
துயருருகிறதே..

கடல் நுரை..
பறவைக் கூட்டங்கள்..
குயிலின் நாதம்..
எதுவுமே மகிழ்ச்சி தரவில்லை!

உன் காதலோடு
நான் வாழ்வதால்
கவிதைகளோடு மாத்திரம்
கலந்துறவாடுகிறேன்!!!

விரைந்தோடி வா!


இறந்தகாலம் முடிந்திற்று..
நிகழ்காலமும் கழிந்திற்று..
எதிர்காலம் நமக்காக
பன்னீர் தூவி வரவேற்கும்!

என் இளமையின்
பாதங்களில்
உன்னுடைய சுவடுகள்..
கரைதேடும் அலையாக
காதலின் நினைவுகள்!

வாழ்வென்றாலும்
சாவென்றாலும்
உன்னுடனே சேருவேன்..
வாடைக்காற்றை சாட்சியாக்கி
உனக்கிதை நான் கூறுவேன்!

உன் கைகோர்த்து
நடக்கும் சமயங்களில்
கவலைகள் யாவும்
காலடியில் வீழும்!

கற்பனையில் உனை எண்ணி
நானே ரசித்தேன்..
பிடிக்காத பாவற்காயையும்
இனிப்பாக ருசித்தேன்!

அர்த்தராத்திரி தூக்கத்தின்
கனவுகளில் வண்ணங்கள்..
கருவறைக் குழந்தையாய்
தலைகீழாய் எண்ணங்கள்!

என் அகத்தைப் புரிந்த
ஆருயிர் நீ..
என் வாழ்வை பகிரும்
உரிமையும் நீ!

எங்கிருக்கிறாய் எனைவிட்டு
என் மன்னவா..
உனக்காக காத்திருக்கிறேன்
விரைந்தோடி வா!!!

Thursday, June 21, 2012

எதிரொலி!


எதிர்பார்ப்புக்கள் ஏதுமின்றி
நானிருந்தபோது
எனக்கு வைரமாக
நீ கிடைத்தாய்..
வைரத்தின்
பெறுமதி நான் அறிகின்றபோது
என்னைவிட்டுப் பிரிந்தாய்!

பல கேள்விகள் உண்டு
என்னிடம் - அங்கு
விடைகள் உண்டா உன்னிடம்?

நீ
என் நினைவுகளின்
ஆணி வேராகிப் போனதாலா
எண்ணங்கள் யாவும்
உன்னைப் பற்றியே
கிளை விரித்திருக்கின்றன?

காலத்தின் கட்டாயங்களுக்கு
கட்டுப்பட்டு - நீயும்
சிந்தித்துக் கொண்டிருக்கிறாயா
என்னைப் போலவே?

உன்னை மறக்க வேண்டும்
என்ற உண்மையை மட்டும்
அடிக்கடி
நினைத்துக் கொள்கிறேன்..
அங்கும் உன் நினைவுகளே
உந்தப்படுகின்றன!

எனது ஒவ்வொரு
சிறிய வெற்றிக்குமான - உனது
முதலாவது கைதட்டல்
இன்று எனக்கு கேட்கவேயில்லை!

வார்த்தைகளில் வடிக்கவியலா
எனது துன்பங்களை
பெருமூச்சுக்களாய்
மொழிபெயர்த்திருக்கிறேன்..

பாறையில் எதிரொலிக்கும்
என் துயரக்குரல்
என்றோ ஒருநாள்
உனக்குக் கேட்கும்
என்ற நம்பிக்கையில்!!!

பிரார்த்திப்போம் எந்நாளும்!


காலங்கள் கடந்தாலும்
கலை ஞானம் நிலைக்கச் செய்த
ஆசானே உம் நினைவுகள்
என்றென்றுமே வாழ்ந்திருக்கும்!
கற்போர்க்கு வழிகாட்டி
கல்விக்கு உயிரூட்டி
உத்தமராய் உதித்தீரே
நம்மண்ணில் விடிவிளக்காய்!

நல்லாசானாய்
அதிபராய்
உயர் அதிகாரியாய்
பல பரிமாணங்கள் பெற்று
வெலிகமை மண்ணுக்கு
பெருமை சேர்த்தீரே!
மாணவச் செல்வங்கள்
மதிப்புடனே வாழ்ந்திட
பண்பாகப் படிப்பித்து
பார்போற்றச் செய்தீரே!

அன்றைய மாணவருள்
அறபாவில் நீர் மட்டும்
பேராதனை பல்கலைக் கழகத்தின்
பட்டதாரியானீரே!
இவ்வுலகக் கல்வியுடன்
சன்மார்க்கம் இலக்கியம் என
சாதனைகள் புரிந்தீரே
சரித்திரமாய் திகழ்ந்தீரே!

ஈருலக வெற்றிக்கும்
அயராது உழைத்த உம்மை
ஜன்னத்துல் பிர்தவ்ஸ்
சுவன வாயில் வரவேற்க..
பிரார்த்திப்போம் எந்நாளும்
பிரார்த்திப்போம் என்றென்றும்!!!

(மர்கூம் ஏ.ஆர்.எம். ஹுஸைன் அவர்களின் நினைவாக எழுதப்பட்ட கவிதை)