Wednesday, November 21, 2012

உண்மை அறிந்தவள்!


வெயிலில் எரிகிறாளா
குளிரில் உறைகிறாளா
உணவு உண்டாளா
உறக்கம் தொலைத்தாளா
என்ன செய்து கொண்ருப்பாள்?

கைச்சேதப்பட்டு இப்படி ஆனாளா
அல்லது – பிள்ளைகள்
கைவிட்டதனால் இப்படி ஆனாளா?

பாதையோரம் அவளுக்கு வீடு
உடைந்த குடை
அந்த வீட்டின் கூரை!

வேளாவேளைக்கு உணவு?
படைத்தவனுக்குத் தெரியாதா
படியளக்க?
ஏதோ சாப்பிடுகிறாள்!

ஒரு போத்தல் தண்ணீரை
மூடியில் ஊற்றியூற்றிக் குடிக்கிறாள்..
தண்ணீரின் பெறுமதி
எம் எல்லோரையும் விட
அவளுக்குத் தெரிந்திருக்கிறது!

சொந்தங்கள் இல்லை – அதனால்
சோகங்களும் இல்லை
பொதியொன்றைத் தவிர
அவளிடம் வேறெதுவுமே இல்லை!

உலகம் நிரந்தரமில்லை என்பதை
உலகுக்கு அறிவிக்கும்
ஞானி அவள்!

அதனால்தான்
பேராசை, பொறாமை,
டாம்பீகம், வீண்பெருமை
எல்லாம் மறந்து
அவளது உலகில்
இன்பமாயிருக்கிறாள்!!!

இரத்தம் குடித்த காட்டேறி!

சிட்டாக விளையாடிக் கொண்டிருந்தது
பூக்காத சிறு மொட்டு..
அதனிடம் பூவைக் காட்டி
அழைத்துச் சென்றது
இரத்தம் குடிக்கும் காட்டேறி!

பூ முகத்தைப் பார்த்து
பூவைக்காட்டி மறைவுக்கு
இழுத்துச் சென்றது அந்த மிருகம்..

பின்..
காட்டேறியின் விலங்குணர்வுக்கு
கன்றுக்குட்டி இரையானது!

மிருகங்களைக் கொன்று
இரத்தம் குடித்த அந்த வெறியன்..
இறுதியில்
இரக்கமேயின்றி பாலகியை
பதம்பார்த்துவிட்டு
தலைமறைவானான்!

நரபலி கொடுக்கும்
மூட நம்பிக்கையில்
மூழ்கிப்போன தாயின்
மகனல்லவா இவன்?

அவனுக்கு
நோன்புடன் களைத்திருந்த
சிறுமியின் உயிர்
தேனாக இருந்திருக்குமோ?

அல்லாஹ்வே
அநியாயக் காரர்களுக்கு
நீயே போதுமானவன்
நீதியான தண்டணை வழங்க!!!

குறிப்பு - (2012.08.05 இல்  வெலிகமையில் ஒரு காமுகனால் கொலை செய்யப்பட்ட அப்ரா என்ற சிறுமிக்காக எழுதப்பட்டது)

முகவரி தேடும் மலையகம்!


முகவரி என்பதன்
முதலெழுத்து எங்கே
முகவரி தரப்போகும்
முதல்வனும் எங்கே?

ஆண்டாண்டு காலங்கள்
ஆட்சியினைப் புரிந்தார்கள்
தொழிலாளியான எம்மை
தொலைதூரம் எறிந்தார்கள்?

பச்சையணி தேயிலை மலையில்
இச்சையோடு துரையிருப்பான்
கொழுந்தை பெண்கள் பறித்தாலும்
கொடும்பேச்சால் துளைத்தெடுப்பான்!

எம் பாட்டில் நாமிருந்தோம்
துணையின்றி வாழ்ந்திருந்தோம்
அவர் பாட்டுக்கு ஆடச் சொன்னார்கள்
அவர் மெட்டுக்கு பாடச் சொன்னார்கள்
ஆட்டங்கள் ஓயவில்லை - இன்னும்
எமக்கு ஓய்வும் இல்லை!

சிங்கமாய் கர்ஜித்தோம்
சிற்றெரும்பாய் ஆக்கிவிட்டார்கள்
சிட்டுக்களாய் சிறகசைத்தோம்
சிறகிரண்டை உடைத்துப் போட்டார்கள்!

ஒரு கையில் பொட்டலமும்
தலையிலொரு கூடையுமாய்
மறு வேலை உணவுக்காய்
மலைக்கு நாம் புறப்படுவோம்!

கைகட்டி வாய்பொத்தி
கைதியாய் இருக்கின்றோம்
கணக்குப் பிள்ளையின் முன்
கடுகாக சிறுக்கின்றோம்!

கவலைகள் மறப்பதற்கு
கசிப்பொன்றும் மருந்தில்லை
ஆனாலும் அதைவிட்டால்
எம்மவர்க்கு வழியில்லை!

பொருளாதாரச் சுமை
பொறுமையை சோதிக்குது
பணங்காசு குறைஞ்சதால
படிப்பை அது பாதிக்குது!

நெருப்பட்டி குடில்களில்
நெரிசல்கள் தினம் நிகழும்
நித்தம் எம் துயர்கண்டே
நிலவோடு இரவு அழுவும்!

மழைச் சாரல் அடித்தாலும்
வெயில் கொளுத்தி எரித்தாலும்
வாழ்விலொரு மாற்றமில்லை
வழிதெரிய ஏற்றமில்லை!

மலையக மைந்தர்களே
மனசில் இதைப் பதித்திடுங்கள்
இனியாவது நாம் மிளிர
இனிய விதி படைத்திடுங்கள்!

முகவரி என்பதன்
முதலெழுத்து ஆகிடுங்கள்
முகவரி தந்திடும்
முதல்வனாய் மாறிடுங்கள்!!!