வெயிலில் எரிகிறாளா
குளிரில் உறைகிறாளா
உணவு உண்டாளா
உறக்கம் தொலைத்தாளா
என்ன செய்து கொண்ருப்பாள்?
கைச்சேதப்பட்டு இப்படி ஆனாளா
அல்லது – பிள்ளைகள்
கைவிட்டதனால் இப்படி ஆனாளா?
பாதையோரம் அவளுக்கு வீடு
உடைந்த குடை
அந்த வீட்டின் கூரை!
வேளாவேளைக்கு உணவு?
படைத்தவனுக்குத் தெரியாதா
படியளக்க?
ஏதோ சாப்பிடுகிறாள்!
ஒரு போத்தல் தண்ணீரை
மூடியில் ஊற்றியூற்றிக் குடிக்கிறாள்..
தண்ணீரின் பெறுமதி
எம் எல்லோரையும் விட
அவளுக்குத் தெரிந்திருக்கிறது!
சொந்தங்கள் இல்லை – அதனால்
சோகங்களும் இல்லை
பொதியொன்றைத் தவிர
அவளிடம் வேறெதுவுமே இல்லை!
உலகம் நிரந்தரமில்லை என்பதை
உலகுக்கு அறிவிக்கும்
ஞானி அவள்!
அதனால்தான்
பேராசை, பொறாமை,
டாம்பீகம், வீண்பெருமை
எல்லாம் மறந்து
அவளது உலகில்
இன்பமாயிருக்கிறாள்!!!