Tuesday, August 19, 2014

வாழ்வி(ய)ல் வசந்தம்!

உள்ளிழுத்து வெளிவரும் - என்
உஷ்ண மூச்சுக் காற்று
இதயத்தின் ரணங்களை
மொழிபெயர்க்கும்!

என் வீட்டு ஜன்னல் கதவு
என் மன ஓலத்தை எதிரொலிக்க
ஒத்தாசை புரியும்!

காயப்பட்ட என் நெஞ்சம்
வேதனை தாங்காமல்
விம்மித் துடிக்கும்!

நித்திரை வராத
நிலவுப் பொழுதுகளில்
கண்கள் மட்டும்
கண்ணீர் வடிக்கும்!

செத்துப் போன என் வாழ்வு
சில சொப்பனங்களால் மாத்திரம்
தினம் நகரும்!

யோசித்து வலிக்கும்
என் உணர்வுகள் - எப்போது
நிம்மதியை உணரும்?

கடந்து போன காலங்கள்
உயிரை உடைத்து
வலிகள் தரும்!
ஆனபோதும் நிச்சயமாய்
ஒருநாள் எனக்கு
வசந்தம் வரும்!!!