Tuesday, October 11, 2011

தவிப்பு!


தனிமையின் தவிப்பில்
உன்
தொலைபேசி அழைப்புகள்தான்
எனக்கு துணையாகின..

நீ
காலத்தின்
கட்டளைக்கிணங்க
என்னை விட்டுப்போன பின்
துயரங்களே
என் தோழியாகின..

நிமிஷங்களின் நகர்வுகள்
எனக்குப் புரிந்தது
யுகங்களாகத்தான்!

உன்
குரல் கேட்பதற்காகவே
என் செவிகள்
தவமிருந்ததை
நீ அறிவாயோ என்னவோ?

எனைப் பார்க்க
இன்று வருவாய்..
இல்லையில்லை
நாளை வருவாய்
என்றெண்ணியே
என் வாழ்நாள் கழிகிறது!

நாட்கள் சக்கரம் பூட்டி
ஓடும் என்று பார்த்தால்
அவையோ
ஆமை வேகத்தில் நகர்ந்து
என் உயிரை வதைக்கிறது!

என் குழந்தாய்..
திருமணமுடித்து
வெளிநாடு போன நீ..
இந்தத் தாயைப் பார்க்க வராமல் - என்
இதயத்தைப் பிளந்தாய்!

மகனே..
உனைக் காணவே
உயிரோடிருக்கிறேன்..
ஒரே ஒருமுறை வந்து
பார்த்துவிட்டுப் போ!!!