Thursday, June 21, 2012

எதிரொலி!


எதிர்பார்ப்புக்கள் ஏதுமின்றி
நானிருந்தபோது
எனக்கு வைரமாக
நீ கிடைத்தாய்..
வைரத்தின்
பெறுமதி நான் அறிகின்றபோது
என்னைவிட்டுப் பிரிந்தாய்!

பல கேள்விகள் உண்டு
என்னிடம் - அங்கு
விடைகள் உண்டா உன்னிடம்?

நீ
என் நினைவுகளின்
ஆணி வேராகிப் போனதாலா
எண்ணங்கள் யாவும்
உன்னைப் பற்றியே
கிளை விரித்திருக்கின்றன?

காலத்தின் கட்டாயங்களுக்கு
கட்டுப்பட்டு - நீயும்
சிந்தித்துக் கொண்டிருக்கிறாயா
என்னைப் போலவே?

உன்னை மறக்க வேண்டும்
என்ற உண்மையை மட்டும்
அடிக்கடி
நினைத்துக் கொள்கிறேன்..
அங்கும் உன் நினைவுகளே
உந்தப்படுகின்றன!

எனது ஒவ்வொரு
சிறிய வெற்றிக்குமான - உனது
முதலாவது கைதட்டல்
இன்று எனக்கு கேட்கவேயில்லை!

வார்த்தைகளில் வடிக்கவியலா
எனது துன்பங்களை
பெருமூச்சுக்களாய்
மொழிபெயர்த்திருக்கிறேன்..

பாறையில் எதிரொலிக்கும்
என் துயரக்குரல்
என்றோ ஒருநாள்
உனக்குக் கேட்கும்
என்ற நம்பிக்கையில்!!!

No comments: